ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி
X
திருக்கல்யாண வைபோகம் நடைபெற்ற காட்சி.
ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணி அளவில் சண்முகர் வள்ளி-தெய்வானைக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.அதனை தொடர்ந்து சாமி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கோபி, மொடச்சூர், கரட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 5-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனாக கைகளில் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு மேல் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

Tags

Next Story