மகளை காதல் திருமணம் செய்தவரை மாமனார் வெட்டிக்கொல்ல முயற்சி

மகளை காதல் திருமணம் செய்தவரை மாமனார் வெட்டிக்கொல்ல முயற்சி
X

பைல் படம்.

Erode News Today - ஈரோடு அருகே மகளை காதலித்து திருமணம் செய்தவரை வெட்டிக்கொலை செய்ய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Erode News Today - ஈரோடு மாவட்டம், தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு மனைவி விஜயலட்சுமி, 29 வயதான மகன் விக்னேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர். விக்னேஷ் கார்த்திக் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர்களான பால்ராஜ்-துளசியம்மா தம்பதியர்களின் மகள் ஜோதி.

கடந்த 3 ஆண்டுகளாக விக்னேஷ் கார்த்திக்கும், ஜோதியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு ஜோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் விக்னேஷ் கார்த்திக்கின் வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

கடந்த மாதம் கேரளாவுக்கு வேலைக்கு சென்ற விக்னேஷ் கார்த்திக், நேற்று முன்தினம் மாலை மீண்டும் அவர் திகனாரையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து உள்ளார். அன்று இரவு வீட்டில் தன்னுடைய மனைவி ஜோதி மற்றும் தந்தை, தாயுடன் விக்னேஷ் கார்த்திக்கு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது விக்னேஷ் கார்த்திக்கின் வீட்டுக்குள் அவருடைய மாமனார் பால்ராஜ், மாமியார் துளசியம்மா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் திடீரென்று புகுந்தனர். உள்ளே நுழைந்ததும் துளசியம்மா தான் கொண்டு வந்த மிளகாய் பொடியை விக்னேஷ் கார்த்திக்கின் முகத்தில் தூவினார். பின்னர் பால்ராஜ், அரிவாளால் விக்னேஷ் கார்த்திக்கை சரமாரியாக வெட்டினார். பால்ராஜ் வெட்டியதில் விக்னேஷ் கார்த்திக்குக்கு கை, கால், வயிற்று பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டுள்ளார். உடனே பால்ராஜ், துளசியம்மா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர். வலைவீச்சு படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த விக்னேஷ் கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் அங்கிருந்து மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகனை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற பால்ராஜ், துளசியம்மா, 16 வயது சிறுவன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story