ஈரோட்டில் 16 வயது சிறுமி பலாத்காரம்: காய்கறி கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

காய்கறி கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது (பைல் படம்).
ஈரோட்டில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காய்கறி கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோட்டை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள் 11ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பு சரியாக வராததால் படிப்பை பாதியில் நிறுத்தி சோலாரில் உள்ள ஒரு காய்கறி கடைக்கு அந்த சிறுமி வேலைக்கு சென்றார். இந்த நிலையில், கடந்த 20- 6- 2020-ம் ஆண்டு வீட்டில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர் மகள் மாயமானது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே,மாயமான சிறுமி 3 நாட்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது, சிறுமியிடம் தாலுகா போலீசார் விசாரணை நடத்திய போது, சிறுமியை அவர் வேலை பார்த்து வந்த காய்கறி கடை உரிமையாளர் ஈரோடு, பெரியசெட்டிபாளையம், கணபதி நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 46) என்பவர் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
சம்பவத்தன்று, சிறுமியிடம் கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காரில் சிறுமியை ஈரோடு, கரூர் என பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பின்னர் உரிமையாளர் சிறுமியை நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்று கூறிவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஈரோடு தாலுகா போலீசார் கோவிந்தராஜ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி கோவிந்தராஜூக்கு 10 வருட சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu