நம்பியூர்: மது விற்றவரை பிடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
கைது செய்யப்பட்ட வேலன் என்கிற வேலுச்சாமி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள கெடாரை பகுதியில் மது விற்பனை நடந்து வருவதாக வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது, ராயர்பாளையத்தை சேர்ந்த வேலன் என்கிற வேலுச்சாமி என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் பிடிக்க முயன்றார். அப்போது, அந்த நபர் தாக்கியதில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் கீழே விழுந்ததில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து மது விற்ற வேலுச்சாமி அவர் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவருக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், மது விற்பனையில் ஈடுபட்ட வேலுச்சாமியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu