ஆடி அமாவாசைக்கு காவிரி கரை பகுதியில் குழாய் மூலம் நீர் தெளிக்க ஏற்பாடு

ஆடி அமாவாசைக்கு காவிரி கரை பகுதியில் குழாய் மூலம் நீர் தெளிக்க ஏற்பாடு

காவிரி-பவானி ஆறு சங்கமிக்கும் கூடுதுறை கரைகள் தெரியாமல் கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

ஆடி அமாவாசைக்கு காவிரி கரை பகுதியில் குழாய் மூலம் காவிரி நதி நீர் தெளிப்பதற்கு கோயில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆடி அமாவாசைக்கு காவிரி கரை பகுதியில் குழாய் மூலம் காவிரி நதி நீர் தெளிப்பதற்கு கோயில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழுள்ள காவிரி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள கோயில்களில் வெள்ள அபாய எச்சரிக்கையினை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பவானி, சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயில், காங்கேயம்பாளையம், நட்டாட்ரீஸ்வரர் கோயில், நஞ்சைகாளமங்கலம், மத்தியபுரிஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் குலவிளக்கம்மன் கோயில், அம்மாபேட்டை சொக்கநாதசுவாமி கோயில், ஊஞ்சலூர், மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நஞ்சை கிளாம்பாடி கைலாசநாதர் கோயில் மற்றும் காவிரி ஆற்றங்கரையின் அருகே உள்ள சிறிய கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாளை மறுநாள் (3ம் தேதி) மற்றும் 4ம் தேதிகளில் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் காவிரி நதிக்கரையில் முன்னோர்களுக்கான திதி, தர்பணம் மற்றும் வழிபாடு முதலியன செய்ய ஏதுவாக பவானி, சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயில், காங்கேயம்பாளையம் மத்தியபுரிஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் குலவிளக்கம்மன் கோயில், அம்மாபேட்டை சொக்கநாதசுவாமி கோயில் காவிரி கரை பகுதியில் குழாய் மூலம் காவிரி நதி நீர் தெளிப்பதற்கு திருக்கோயில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story