ஈரோட்டில், இன்று சிறப்பு தொழில் கடன் மேளா: ஆட்சியர் தகவல்

ஈரோட்டில், இன்று சிறப்பு தொழில் கடன் மேளா: ஆட்சியர் தகவல்

பைல் படம்

ஈரோட்டில், இன்று சிறப்பு தொழில் கடன் மேளா நடைபெறுவதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கூறினாா்.

ஈரோட்டில் சிறப்பு தொழில் கடன் மேளா இன்று (திங்கட்கிழமை) தொடங்குவதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கிவருகிறது.

இந்த கழகத்தின் ஈரோடு கிளை அலுவலகத்தில் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

மானியம் இந்த சிறப்பு தொழில் கடன் மேளாவில் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனமேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும்.

இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகைதந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திகொள்ளலாம். இந்த சிறப்பு முகாம் ஈரோடு பெரியார் நகர் 80 அடி ரோடு சி.எஸ்.செங்கோட்டையா வணிக வளாகம், 2-வது தளத்தில் உள்ள ஈரோடு கிளை அலுவலகத்தில் நடைபெறும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story