கொங்கர்பாளையத்தில் மக்கள் போராட்டம்! கறுப்பு கொடியேற்றி எதிர்ப்பு

கொங்கர்பாளையத்தில் மக்கள் போராட்டம்! கறுப்பு கொடியேற்றி எதிர்ப்பு
X
கொங்கர்பாளையத்தில் நீர் குழாய்க்கான விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்,குழாயுக்காக விவசாயிகளின் நிலங்களை மீறி கறுப்பு கொடியேற்றம்.

தனியார் நீர் குழாய் பதிப்பு விவகாரத்தில் கொங்கர்பாளையம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டி.என்.பாளையத்தை அடுத்துள்ள கொங்கர்பாளையம் ஊராட்சியின் வினோபா நகர் பகுதியில், குண்டேரிப்பள்ளம் அணை அருகே சில தனியார் நிறுவனங்கள் குடிநீர் கொண்டு செல்வதற்காக 6 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் பதித்துள்ளனர்.

இந்த குழாய் பதிப்பு பணி நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டாலும், அப்பகுதி மக்கள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக, குழாய் பதிப்பதற்கான பாதை வரி அனுமதியில் முறைகேடுகள் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் கொங்கர்பாளையம் கிராம மக்கள் கோபி தாலுகா அலுவலகத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் சரவணன் தலையீட்டில், ஒரு குழு அமைத்து பைப்லைன் பதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் முன்னிலையில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை அடுத்து, மக்கள் தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால் இன்று புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வினோபா நகர், எஸ்.டி.காலனி, கோவிலூர், தோப்பூர், கொங்கர்பாளையம், புது வலவு, குன்னாங்கரடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், ஊராட்சி சார்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இந்த விதிமீறல்களுக்கு துணைபோன அரசு அதிகாரிகளை கண்டித்து அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தனியார் நலனுக்காக பொது மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அதிகாரிகள் தரப்பில் இருந்து விரைவில் தீர்வுகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story