பவானி: அம்மாபேட்டை அருகே வாய்த்தகராறில் வீட்டுக்கு தீ வைத்த அண்ணன், தம்பி கைது!

அம்மாபேட்டை அருகே வாய்த்தகராறில் வீட்டுக்கு தீ வைத்த அண்ணன், தம்பியைப் போலீசார் நேற்று கைது செய்த போலீசார், மளிகைக் கடையை இடித்து சேதப்படுத்திய ஜேசிபி டிரைவரைத் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள செம்படாபாளையம், ராமாச்சிபுரம், கத்திரியாங்காட்டைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி மணி (45). கருத்து வேறுபாட்டால் கடந்த 10 வருடங்களாக கணவரைப் பிரிந்து, மகன் ஹரி கோபாலகிருஷ்ணனுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். ஜேசிபி டிரைவரான ஹரி கோபாலகிருஷ்ணனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த மாதேஸ்வரன் மகன் ஜெகதீசனும் தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், மணியின் வீட்டுக்கு, நேற்று முன்தினம் இரவு வந்த மாதேஸ்வரனின் மூத்த மகன் ஜெகதீஸ், இளைய மகன் மணிகண்டன் ஆகியோர் தீ வைத்து விட்டு தப்பி ஓடினர். இதைக் கண்ட அப்பகுதியினர் அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள், அருகாமையில் உள்ள மணியின் தங்கை பாவாயி வசித்து வந்த வீடும் தீயில் எரிந்தது.
இதில், வீட்டிலிருந்த பொருட்கள், துணிகள் உட்பட அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அம்மாபேட்டை போலீசார், ஜெகதீசன் மற்றும் மணிகண்டனைக் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மணிகண்டனின் மனைவி பிரியதர்ஷினி (24), ஜேசிபி டிரைவரான ஹரி கோபாலகிருஷ்ணன், தான் ஓட்டி வரும் ஜேசிபி மூலம் தனது மளிகைக்கடையை இடித்து சேதப்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu