பவானியில் ஒரே இரவில் 3 இடங்களில் ரூ.78 ஆயிரம் பணம் திருட்டு

பவானியில் ஒரே இரவில் 3 இடங்களில் ரூ.78 ஆயிரம் பணம் திருட்டு
X

பணம் திருட்டு (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் பவானியில் ஒரே இரவில் 3 இடங்களில் ரூ.78 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் மனோ. நேற்று முன்தினம் செல்வராஜ் மனைவியை அழைத்துக்கொண்டு காசிக்கு சென்றுவிட்டார். மனோ வீட்டின் மாடி அறையில் படுத்து தூங்கினார்.

இந்தநிலையில், நேற்று காலை மனோ மாடியில் இருந்து கீழே வந்து பார்த்தார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை காணவில்லை. யாரோ நள்ளிரவில் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல், பவானி மேட்டூர் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் ரூ.7 ஆயிரமும், அருகே உள்ள மற்றொரு டீக்கடையில் ரூபாய் ஆயிரத்தையும் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 இடங்களிலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story