சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையத்தின் பூட்டை உடைத்து பொருட்கள் சூறை!

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே அரசு துணை சுகாதார நிலையத்தின் பூட்டை உடைத்து பொருட்கள் சூறையாடியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூரில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் செவிலியர் வழக்கம் போல் பணி முடிந்து சுகாதார நிலையத்தை பூட்டு விட்டு சென்றார்.
இந்தநிலையில், நேற்று காலை வந்து பார்த்தபோது, சுகாதார நிலையத்தின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததையும், உள்ளே இருந்த பொருட்களை வெளியே கிடந்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், உள்ளே இருந்த மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சுகாதார நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பணம் இருக்கிறதா? என்று தேடி பார்த்துள்ளனர். ஆனால், பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து உள்ளே இருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து, இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து இச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu