முதல்வர் பொது நிவாரண நிதிக்கு யாசகம் எடுத்து ரூ.10 ஆயிரத்தை வழங்கிய முதியவர்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு யாசகம் எடுத்து ரூ.10 ஆயிரத்தை வழங்கிய முதியவர்
X

பூல் பாண்டியன்.

தமிழ்நாட்டில் இதுவரை 400 அரசு பள்ளிகளுக்கு சேர், மேஜைகள், ஆர்.ஓ. வாட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளதாக முதியவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன்(73) என்ற முதியவர் கையில் ரூ. 10,000 பணத்துடன் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்குவதற்காக இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

இதுகுறித்து முதியவர் பூல் பாண்டியன் கூறியதாவது: எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங் கிணறு பகுதி ஆகும். எனக்கு சிறுவயதிலிருந்தே பொது சேவையில் ஈடுபடுவது, பிறருக்கு உதவி செய்வது மிகவும் பிடிக்கும். 1980 ஆம் ஆண்டு பிழைப்பிற்காக மும்பை சென்றேன். அங்கு ஒரு அயன் கடையில் வேலை பார்த்தேன். பின்னர் அந்த வேலை ஒத்து வராததால் வேலையை விட்டு விட்டு அங்கு சிறு ஆண்டுகள் யாசகம் மேற்கொண்டேன்.

அதன் பின்னர் 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தேன். கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பாபநாசம் போன்ற பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்தேன். அதில் சேர்ந்த பணத்தில் என்னால் முடிந்த உதவி செய்ய முடிவு செய்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவினேன். இதேபோல் கொரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் மேற்கொண்டு அதில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன்.

இதுவரை யாசகம் மூலம் சேர்ந்த பணத்தில் ரூ. 55 லட்சத்தை நிதி உதவியாக வழங்கி உள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 400 அரசு பள்ளிகளுக்கு சேர், மேஜைகள், ஆர்.ஓ. வாட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு முதல் முதலாக வந்துள்ளேன். தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று யாசகம் எடுத்து அதன் மூலம் சேரும் பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story