திம்பம் மலைப்பாதை சாலை தடுப்புச் சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை

திம்பம் மலைப்பாதை சாலையோரத் தடுப்புச் சுவர் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தை
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை சாலையோரத் தடுப்புச் சுவா் மீது சிறுத்தை படுத்திருந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இவ்வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் திம்பம் மலைப்பாதை சாலையில் நடமாடுவது வழக்கம்.
இந்நிலையில், திம்பம் மலைப்பாதையில் 3வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரத் தடுப்புச் சுவர் மீது சிறுத்தை ஒன்று படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக காரில் சென்றவர்கள் சிறுத்தை படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை காரில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர். பின்னர், காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்ட சிறுத்தை மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தற்போது, தடுப்புச் சுவர் மீது சிறுத்தை படுத்திருக்கும் வீடியோக் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu