ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நாளை வேட்புமனு தாக்கல்
ஈரோடு மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சி மற்றும் 42 பேரூராட்சிகள் என மொத்தம் 735 பதவி இடங்களுக்கு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இதன்படி ஈரோடு மாநகராட்சியில், 60 வார்டுகளும், நகராட்சிகளை பொறுத்தவரை பவானியில் 27 வார்டுகளும், கோபிசெட்டிபாளையத்தில் 30 வார்டுகளும், புளியம்பட்டியில் 18 வார்டுகளும், சத்தியமங்கலத்தில் 27 வார்டுகளும் என மொத்தம் 102 வார்டுகள் உள்ளன.
பேரூராட்சிகளை பொறுத்தவரை அந்தியூர், கருமாண்டிசெல்லிபாளையத்தில் தலா 18 வார்டுகளும், அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அரச்சலூர், அரியப்பம்பாளையம், அத்தாணி, அவல்பூந்துறை, பவானிசாகர், சென்னசமுத்திரம், சென்னிமலை, சித்தோடு, எலத்தூர், ஜம்பை, காஞ்சிகோவில், காசிபாளையம், கெம்ப நாயக்கன்பாளையம், கிளாம்பாடி, கொடுமுடி, கொளப்பலூர், கொல்லன்கோவில், கூகலூர், லக்கம்பட்டி, மொடக்குறிச்சி,நம்பியூர், நசியனூர், நெரிஞ்சிபேட்டை, ஒலகடம், பி. மேட்டுப்பாளையம், பள்ளபாளையம், பெரிய கொடிவேரி, பெருந்துறை, பெத்தாம்பாளையம், சலங்கபாளையம், வடுகபட்டி, வாணிப்புத்தூர், வெள்ளோட்டம்பரப்பு, வெங்கம்பூரில் தலா, 15 வார்டுகளும், நல்லாம்பட்டி, பாசூர், ஊஞ்சலூரில் தலா 12 வார்டுகள் என மொத்தம் 735 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி 4 மண்டல அலுவலகங்கள், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், எந்தெந்த வார்டில் உள்ளவர்கள் எந்தெந்த அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.