கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி காசியூர் ரோடு, சந்தை கடை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 47). இவர் பந்தல் போடும் வேலை பார்த்து வருகிறார். இதனால், அவர் வீட்டிலேயே பந்தல் போடும் சாமான்களை வைத்திருந்தார்.
இவரது வீட்டின் அருகே சந்தை கடையில் ஊசி பாசி விற்பனை செய்பவர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் நேற்று இரவு சாப்பாடு செய்து விட்டு அடுப்பில் தீயை அணைத்து உள்ளனர். எனினும், தீ சரியாக அணையாததால் அதிலிருந்த தீப்பொறி வடிவேல் வீட்டின் மீது பட்டு சிறிது நேரத்தில் வீடு தீ பிடித்துள்ளது.
வடிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் வெளியே இருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் வீட்டில் இருந்த துணிமணிகள், டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரம் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu