வெப்பநிலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பகல் 12 முதல் 3 மணிவரை வெளியில் செல்ல வேண்டாம் : நாமக்கல் கலெக்டர் ஆலோசனை

நாமக்கல் கலெக்டர் உமா,
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பகல் 12 மணி முதல் 3 மணிவரை வெளியில் செல்லவதைத் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கோடை காலம் துவங்கியுள்ளதால், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். காட்டன் மற்றும் வெளிர் நிற ஆடைகளை உடுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது தலைக்கு தொப்பி அல்லது குடை, பாதுகாப்பான கூலிங் கிளாஸ் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பயணங்களின்போது போதுமான குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். உடல் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கலவை ஆகியவற்றை அருந்த வேண்டும்.
குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியோர் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை வெப்பத்தாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும். கால்நடைகளை நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் அனைவருக்கும் குளிர்ந்த குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப்பணியில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான அளவிற்கு குடிநீர் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெய்யில் பாதிப்பினால் அசதி, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டும். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் இருந்து, தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு வருபவர்கள், தாங்கள் வருகை புரிந்த பகுதியில் உள்ள வெப்பநிலையை உடல் ஏற்றுக் கொள்ளும் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
வெய்யில் நேரத்தில் சமைப்பதை தவிர்க்கவும். வெய்யிலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளையும், செல்ல பிராணிகளையும் செல்லவிடக்கூடாது. கருப்பு மற்றும் அடர்வண்ணம் கொண்ட ஆடைகளை அணியக்கூடாது. கடும் வெய்யிலில் குறிப்பாக நண்பகல் 12 மணிமுதல் 3 மணிவரை வெளியில் செல்லக்கூடாது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையாக வேலைகளை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu