ஈரோட்டில் சட்டக்கல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் : ஸ்டாலின்

ஈரோட்டில்  சட்டக்கல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் : ஸ்டாலின்
X
ஈரோட்டில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்.

திமுக வேட்பாளர்கள் ஈரோடு மேற்கு சு.முத்துசாமி, மொடக்குறிச்சி சுப்புலட்சுமி ஜெகதீசன், குமாரபாளையம் வெங்கடாசலம், ஈரோடு கிழக்குத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, பெருந்துறை தொகுதி கொமதேக வேட்பாளர் கே.கே.சி.பாலு ஆகியோரை ஆதரித்து, ஈரோடு சித்தோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

திமுக ஆட்சியில் தான் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமுதாயம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன் காரணமாக அந்த சமுதாயத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் மத்திய, மாநில அரசில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதேபோல், அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடும் திமுக ஆட்சியில்தான் வழங்கப்பட்டது. கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.பழனிசாமி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.

இதுமட்டுமின்றி, பிஏபி பாசனத் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், சென்வாட் வரி ரத்து, ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தியது, ஈரோடு பாதாள சாக்கடைதிட்டம், திருப்பூர் புதிய மாவட்டம், டெக்ஸ்வெலியை உருவாக்கியது, தென்னை நல வாரியம் என திமுக ஆட்சியில் இந்த மண்டல மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோல் முதல்வர் பழனிசாமி தான் கொண்டு வந்த திட்டங்களை வரிசைப்படுத்தி சொல்ல முடியுமா? ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு, வேளாண் சட்டத்திற்கு ஆதரவு, 8 வழிச்சாலை திட்டம், விவசாய நிலத்தில் பெட்ரோலிய குழாய் பதிப்பு என மேற்கு மண்டல மக்களுக்கு பழனிசாமி ஆட்சியில் பல வேதனைகள், சோதனைகள்தான் நடந்துள்ளது. மேற்கு மண்டல மக்களுக்கு தூரோகம் செய்தவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஈரோட்டில் அரசு பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, வேளாண்மைக்கல்லூரி அமைக்கப்படும், அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு தொடங்கப்படும், மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தப்படும், பொது சுத்திகரிப்பு நிலையம், ஈரோட்டில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும். பொல்லான், வல்வில் ஓரிக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்பதுள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளோம். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல. தமிழகத்தின் தன்மானம், சுயமரியாதை காப்பாற்றப்பட நடக்கும் தேர்தலாகும் என்றார்.

Tags

Next Story