கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணி தீவிரம்

கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணி  தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் 4-வது நாளாக கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கோவேக்சின், கோவிஷுல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, பவானி, கோபி அரசு மருத்துவமனை சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய 5 மையங்களில் கடந்த 16 ஆம் தேதி முதல் கோவிஷுல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் நூற்றுக்கும் கீழ் உள்ள நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதலில் அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரண்டாவது கட்டமாக பிற துறைகளில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுதா, லோட்டஸ் ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். இதையடுத்து நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்ட 28 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். அந்த வகையில் கடந்த 13 ஆம் தேதி முதல் ஈரோட்டில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஈரோட்டில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் டாக்டர்கள் செவிலியர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இன்று 4-வது நாளாக இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி டாக்டர்கள் செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட முன் களப்பணியாளர்கள் இன்று இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட அனைவரும் நலமாக இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நாளை தடுப்பூசி போட இருப்பவர்கள் விவரம் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story