ஈரோடு: ஓடும் ரயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ரயில்வே ஒப்பந்த தொழிலாளி கைது

புனேவில் இருந்து கோவை வரை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 வயது சிறுமி தனது தந்தையுடன் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்தார். இந்த ரயிலில், ரயில்வே ஒப்பந்த தொழிலாளியான உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த நவீதம் சிங் (வயது 30) என்பவர் படுக்கை விரிப்பை மாற்றுதல் மற்றும் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி அளவில் சேலம் ரயில் நிலையத்துக்கும், ஈரோடு ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. அப்போது நவீதம் சிங், அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டவே, உடனே நவீதம் சிங் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இதுகுறித்து ஈரோடு ரயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து நவீதம் சிங்கை தேடி வந்தனர். இந்த நிலையில், ஈரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த நவீதம் சிங்கை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu