கோடை துவங்குவதால் பீர் விற்பனை ரூ.2 கோடி அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். வீடுகளிலும் பகல் நேரங்களில் புழுக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் கரும்பு, லெமன் ஜூஸ் வகைகளை விரும்பி குடிக்கின்றனர். இதேபோல் இளநீர் நுங்கு மோர் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
அதேநேரம் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடிமகன்கள் பீர் வகைகளை அதிகளவு வாங்கி அருந்துகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 216 டாஸ்மாக் கடைகளில் கடந்த 20 நாட்களாக பீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் உடல் சூட்டை தணிப்பதற்காக குடிமகன்கள் பீர் குடிப்பது அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மொத்தம் 68. 40 கோடி ரூபாய் மதிப்புக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 14ம் தேதி மட்டும் ரூ.6 கோடியே 35 லட்சம் மது விற்பனையாகி உள்ளதாகவும் இது வழக்கத்தைவிட 2 கோடி ரூபாய் அதிகமாகும் என்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu