ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.05 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிய ஆட்சியர்!

ஈரோட்டில் இன்று (மே.12) நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.05 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (மே.12) திங்கட்கிழமை நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள், ஜாதிச்சான்றிதழ் மாற்றி தரவேண்டுதல், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 225 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கூட்டத்தில் கூட்டுறவுத்துறை, கோபிச்செட்டிபாளையம் சரகத்தின் சார்பில் தொழில் மேம்பாட்டிற்காக தனிநபர் கடனுதவியாக 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.05 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu