வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி: கூட்டமாக வேட்பாளர்கள் குவிந்ததால் பரபரப்பு
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டம் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர்களுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் 4 மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் என 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 4 நகராட்சியில் அந்தந்த அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 42 பேரூராட்சி அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 447 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஈரோடு மாநகராட்சியில் 100 பேர், நான்கு நகராட்சியில் 164 பேர், 42 பேரூராட்சியில் 822 பேர் என மொத்தம் ஒரே நாளில் 1,086 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் இதுவரை 126, 4 நகராட்சிகளில் 246, பேரூராட்சிகளில் 1, 161 பேர் என 1, 533 பேர் இது வரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதனால் இன்று திமுக மற்றும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் போட்டு போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதைப்போல் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இடங்களில் திருவிழா போல் காணப்பட்டது. வேட்பாளர்கள் உடன் இரண்டு பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்