அந்தியூர் அருகே வாய்க்கால் நீரை தேடி வரும் காட்டு யானைகள் கூட்டம்: வனப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்ப கோரிக்கை

அந்தியூர் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், பாசனத்துக்காக திறக்கப்பட்ட வாய்க்கால் தண்ணீரை காட்டு யானைகள் கூட்டம் தேடி வருகின்றன.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு மார்ச் 9ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து முதன்மை வாய்க்கால் காப்புக்காடுகள் வழியாக 6 கி.மீ. தொலைவுக்கு தண்ணீர் சென்று கிளை வாய்க் கால்கள் மூலம் விவசாயிகளின் வேளாண் நிலங்களுக்கு செல்கிறது.
தற்போது, கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதாலும், வறட்சியின் காரணமாக போதிய உணவு கிடைக்காததாலும் வனவிலங்குகள் தண்ணீர் இருக்கும் இடங்களை தேடி படையெடுக்கின்றன
இந்நிலையில், காப்புக்காடுகள் வழியாக செல்லும் முதன்மை வாய்க்காலில் தண்ணீர் ஓடுவதால் வனப் பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி பாசன வாய்க்காலில் தண்ணீரைக் குடித்து செல்வது அதிகரித்துள்ளது.
இதனால், வாய்க்காலின் கரைகள் உடைந்து, பாசனத்துக்கு செல்லும் நீர் தடைபடுகிறது. எனவே, வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu