பவானி கல்பாவி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்: ரூ.14.48 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்!

பவானி அருகே உள்ள கல்பாவி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.14.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மே.20) வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் குறிச்சி உள்வட்டம், கல்பாவி கிராமம், கல்பாவி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று (மே.20) நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி, 40 பயனாளிகளுக்கு ரூ.14.48 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டத்தின் கீழ் அம்மாபேட்டை வட்டாரம், பட்லூர் கிராமத்தில் வசிக்கும் ஜான்சன் என்பவர் ரூ.1 லட்சம் உதவித்தொகை பெற்று ஊறுகாய் புல் தயாரிக்கும் தொழில் செய்து வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இம்முகாமில், இணை இயக்குநர் (வேளாண்மை) தமிழ்ச்செல்வி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) குருசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ்,தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முருகேசன், செயலாளர் (வேளாண் விற்பனைக்குழு) சாவித்திரி, துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.கவிதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜ கோபால், பவானி வட்டாட்சியர் சித்ரா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu