ஈரோட்டில் மண்ணுக்குள் இறங்கிய சாலை சீரமைப்பு
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மண்ணுக்குள் இறங்கிய சாலை சீரமைக்கப்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு காந்திஜி சாலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நேற்று மதியம் திடீரென சாலை மண்ணுக்குள் இறங்கியது. காந்திஜி சாலை மிக முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலையாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீசார் அந்த இடத்தை சுற்றி தடுப்புகளை வைத்து எச்சரிக்கை செய்தனர். இந்த சாலையில் சமீபத்தில்தான் பாதாள சாக்கடை, புதைவட மின் கேபிள், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இந்த பணிகள் முடிந்து அங்கு மீண்டும் புதிய சாலைகள் போடப்பட்டன. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலை மண்ணுக்குள் இறங்கியது.இருந்தாலும் அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலை பணியாளர்கள் இரவோடு இரவாக மண்ணுக்குள் இறங்கிய சாலையை மணல், ஜல்லி நிரப்பி சரி செய்து சீரமைத்தனர்.