ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆய்வு

பெருந்துறை அண்ணா சிலை அருகில் டாப்செட்கோ தனிநபர் கடனுதவி பெற்ற பயனாளி நகல் எடுக்கும் கடை நடத்தி வருவதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சுரேஷ்குமார் பார்வையிட்டு பயனாளியுடன் கலந்துரையாடிய போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் இன்று (மார்ச் 8ம் தேதி) ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் மற்றும் இத்துறையால் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியினை பார்வையிட்டு விடுதியின் செயல்பாடுகள் மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், மாணவிகளின் கல்வி மற்றும் பிற திறன்களை வளர்க்கும் வகையில் அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, நம்பியூர் வட்டம் திட்டமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கல்லூரி மாணவிகள் விடுதியை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க பொதுப்பணி துறையினருக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கி பெருந்துறை கிளையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனி நபர் கடனுதவி பெற்று நகலெடுக்கும் நிலையம் மற்றும் இ-சேவை மையம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார். மேலும் கடனை முறையாக செலுத்துகின்றனரா என அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu