தொடர் மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

தொடர் மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்
X

மழையால் சேதமடைந்த வீடு.

சத்தியமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி சத்தியமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. கொமராபாளையத்தில் 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் அங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மாதேஷ் என்பவரது வீட்டின் மேற்கூரைகள் நேற்று முன்தினம் இரவு சரிந்து விழுந்தது. மேலும் சுவரும் இடிந்து விழுந்தது. தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரது ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது. சம்பவம் நடந்தபோது மாதேஷ் மற்றும் விஜயா குடும்பத்தினர் தங்களது வீடுகளில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள், துளசிமணி ஆகியோரது வீட்டின் சுவரில் விரிசல் விழுந்துள்ளது. இதனால் அந்த வீடுகளும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுபற்றி அறிந்ததும் கொமராபாளையம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?