ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பேரூர் திமுக செயலாளர் உயிரிழப்பு

பேரூர் திமுக செயலாளர் கோபாலகிருஷ்ணன்.
ஆப்பக்கூடல் அருகே நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பேரூர் திமுக செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஆ.கரட்டுபாளையம் பாரதி வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 45). இவர் ஆப்பக்கூடல் பேரூர் திமுக செயலாளராக இருந்தார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக பெருந்தலையூர் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, கவுந்தப்பாடி ஆப்பக்கூடல் ரோட்டில், வந்த போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. இதனால், அதன் மீது மோதி விடாமல் இருக்க அவர் திடீர் பிரேக் போட்டார். இதில், நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோபாலகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணனை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும், பலனில்லாமல் கோபாலகிருஷ்ணன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பேரூர் திமுக செயலாளர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu