பவானி இரட்டைக்கரடு அருகே தனியார் கல்வியியல் கல்லூரியில் காசநோய் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்!

பவானி இரட்டைக்கரடு அருகே தனியார் கல்வியியல் கல்லூரியில் காசநோய் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 9ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் ஜம்பை வட்டாரம் மயிலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட பவானி இரட்டைக்கரடு அருகே உள்ள விநாயகா வித்யாலயா கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன்பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோயினால் பாதிக்கப்பட்டவருடன் வசிப்போர் காசநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு, புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள், உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்பு சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, ,காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் தரணிதரன், கல்லூரியின் தாளாளர், முதல்வர், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் 200 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, அனைவராலும் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu