ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கு: ஈரோடு நீதிமன்றத்தில் இன்று மேலும் ஒருவர் சரண்

சித்தோடு அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் இன்று மேலும் ஒருவர் சரணடைந்தார்.
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் (வயது 30). இவர் இவரது மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி தனது மனைவி சரண்யாவுடன் காரில் சேலத்திற்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூர் சென்று கொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து 2 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ஜானை காரில் வைத்தே சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதனை தடுக்க சென்ற மனைவி சரண்யாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
பின்னர் இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், கொலை கும்பலை சேர்ந்த சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோரை போலீசார் சுட்டு பிடித்தனர். மேலும் வெட்டு காயம் அடைந்த கார்த்திகேயனை பிடித்து போலீசார் கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ,சேலத்தில் பதுங்கி இருந்த பார்த்திபன், அழகரசன், பெரியசாமி, சிவகுமார், சேது வாசன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜீவகன் கடந்த 20ம் தேதி அவரது கூட்டாளி சலீம் என்பவருடன் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கோகுல சுகவனேஷ்வரன் (25) என்பவர் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu