ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுக்கள் ஏற்பு

ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுக்கள் ஏற்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பொதுப்பார்வையாளர் தலைமையில், வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெற்றது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த மாதம் 4-ம் தேதி மரணம் அடைந்ததையடுத்து, அங்கு இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் பலர் வந்து ஆர்வமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கடந்த 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் வரை 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஏராளமானவர்கள் வந்திருந்தனர். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. ஆனால் பலர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்ததால் டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் வரிசையாக வேட்பு மனுக்களை அதிகாரிகள் பெற்றனர். 3 மணிக்கு பிறகு 26 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.

அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளார்கள். அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் செந்தில் முருகனும், அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த்தும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று அந்தந்த கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது. எனவே அவர்கள் 2 பேரும் வேட்புமனுக்களை வாபஸ் பெற உள்ளனர். நேற்று ஒரே நாளில் 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். எனவே இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 96 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார், உதவி அலுவலர் முத்து கிருஷ்ணன் உடன் இருந்தனர். ஒவ்வொரு வேட்பு மனுவும் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. சரியாக பூர்த்தி செய்யப்பட்டு இருந்த வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த வகையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.

வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளர் செந்தில் முருகனின் 2 வேட்பு மனுக்களும் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. இதே போல அ.ம.மு.க. போட்டியில்லை என அறிவித்துள்ள நிலையில், அ.ம.மு.க. வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை மறுநாள் (10 -ம் தேதி) கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

Tags

Next Story