ஈரோடு: சிவகிரியில் ஏடிஎம் இயந்திரத்தில் கள்ளநோட்டுகள் செலுத்திய தொழிலாளி கைது

சிவகிரியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் கள்ளநோட்டுகள் செலுத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஆஸ்பத்திரி சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்துவதற்கான இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரத்தில் ரூபாய் 4,500 ரூபாய் 100 ரூபாய் நோட்டுகளாக செலுத்தப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் குட்டிகண்ணன் அங்கு சென்று அந்த தொகையை சரிபார்த்தார். அப்போது அது முழுவதும் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு சிவகிரி போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அது யாருடைய வங்கிக்கணக்கில் இருந்து செலுத்தப்பட்டது என ஆய்வு செய்தார்.
இதில், சிவகிரி எல்.பி.எஸ். தெருவை சேர்ந்த ராமு (வயது 50) என்பவர் நேற்று முன்தினம் வங்கி ஏடிஎம் மையத்துக்கு சென்று பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ள நோட்டுகள் செலுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, ராமுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓட்டல் தொழிலாளியான ராமு ஏடிஎம் இயந்திரத்தில் கள்ளநோட்டுகள் செலுத்தியதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu