பவானி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் மற்றும் கோடை வெப்ப தாக்க பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் !

பவானி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் மற்றும் கோடை வெப்ப தாக்க பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்.12ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் ஜம்பை வட்டாரம் பவானி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் மற்றும் கோடை வெப்ப தாக்க பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன்பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காசநோய் பாதித்தவருடன் வசிப்போர் 'சிஓய் டிபி' பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதின் அவசியம்,நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்பாடுகள், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, கோடை வெப்ப தாக்கத்தினால் ஏற்படும் உடல் பாதிப்புகள், கோடை வெப்ப தாக்கத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், கோடைவெப்ப தாக்க அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழிமுறைகள், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் அவசியம்,கோடைகாலத்தில் அடிக்கடி நீர் பருக வேண்டியதின் அவசியம், கோடைக்கால உணவு முறைகள், கோடை காலத்தில் உடுத்த வேண்டிய உடைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் , மருத்துவ அலுவலர் மரு. ஜனனி, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் தரணிதரன், காசநோய் சுகாதாரப் பார்வையாளர் புவனேஸ்வரி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 90 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu