கோபி அளுக்குளியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க பணி: மத்திய சுகாதாரத் துறை இயக்குநரக குழுவினர் ஆய்வு

கோபி அளுக்குளியில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு இயக்கப் பணிகளை மத்திய சுகாதாரத் துறை இயக்குநரக குழுவினர் இன்று (மார்ச் 6ம் தேதி) ஆய்வு செய்தனர்.
டெல்லியில் இருந்து வந்த மத்திய சுகாதாரத் துறை மண்டல இயக்குனர் மரு. நிர்மல் ஜோ தலைமையில் மருத்துவ அலுவலர் மரு.ஐஸ்வர்யா, உலக சுகாதார நிறுவன ஆலோசகர் மரு.ரீனு ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் காசநோய் இல்லா ஈரோடு இயக்க பணிகளை நேற்றும், இன்றும் ஆய்வு செய்தனர்.
அதன்படி, நேற்று சித்தோடு, ஈரோடு மாவட்ட காசநோய் மையம் மற்றும் பி.பெ.அக்ரஹாரம் பகுதிகளிலும், இன்று திங்களூர், வெள்ளாங்கோவில் மற்றும் கோபி அரசு மருத்துவமனை மற்றும் கோபி அளுக்குளியில் நடைபெற்ற காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாமில் காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, காசநோய் மருத்துவ சேவைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டு அறிந்து, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி பணிகளை ஆய்வு செய்தனர்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட காசநோய் மருத்துவப் பணிகளுக்கு ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் மரு.ராமச்சந்திரனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் சந்திரலேகா, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், சுதன் சர்மா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வாசுதேவன், காசநோய் சிகிச்சை பார்வையாளர் விவேகானந்தன், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu