பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதி தேவபுரம். இங்குள்ள பொது மயானத்தில் பவானி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீரை ஒருங்கிணைத்து சுத்திகரிப்பு செய்ய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இதற்கு தேவபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் 12வது வார்டு அ.தி.மு.க. நகர கவுன்சிலர் தங்கமணி தலைமையில் தேவபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் மோகன் குமாரை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், 12-வது வார்டு பகுதியில் உள்ள மயானத்தில் சரிபாதி இடம் பயன்பாட்டில் உள்ளது. மீதம் உள்ள இடத்தில் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் மயானத்துக்கு இடம் இருக்காது. எனவே இந்த திட்டத்தை கைவிட்டு, வேறு இடத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu