ஈரோட்டில் ரத்ததானம் செய்வதாக கூறி பணம் பறிப்பு: எஸ்பியிடம் புகார் மனு

ஈரோட்டில் ரத்ததானம் செய்வதாக கூறி பணம் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் மனு நேற்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், எங்களது கூட்டமைப்பின் சார்பில் அவசர கால சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம்.
இதற்காக தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பதற்காக 'வாட்ஸ் அப்' செயலியில் குழு தொடங்கி உள்ளோம். இந்த குழுவில் ரத்தம் தேவைப்படுவதாக பதிவு செய்தவர்களின் செல்போன்களுக்கு தொடர்பு கொண்ட 2 பேர், தங்களை தன்னார்வலர்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர்.
மேலும், ரத்தம் கொடுக்க வருவதற்கு போக்குவரத்து செலவுக்காக பணம் கொடுக்க வேண்டும் என்று ஆன்லைன் மூலமாக பணத்தை பறித்து மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு ரத்த தானம் செய்யாததால், அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது.
எனவே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu