ஈரோடு மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1.30 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: நாளை தொடக்கம்

ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 1.30 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை (மார்ச்.17) தொடங்குகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரத்து 956 குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்பட உள்ளது.
வைட்டமின் 'ஏ' திரவம் நமக்கு விழித்திரை நிறமிகளை உற்பத்தி செய்து குறைவான வெளிச்சத்தில் பார்க்கவும் மற்றும் வண்ணங்களை பார்ப்பதற்கும் உதவுகிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன், மூச்சுக்குழாய் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
வைட்டமின் 'ஏ' சத்தானது அடர்பச்சை நிற கீரைகள் மற்றும் மஞ்சள் நிற பழங்கள், காய்கறி, மீன், இறைச்சி, முட்டை, பால் மற்றும் செறிவூட்டப்பட்ட எண்ணெய்களில் உள்ளது. விட்டமின் 'ஏ' குறைபாட்டினால் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு, வயிற்றுப்போக்கு மற்றும் தீவிர சுவாச தொற்று நோய் ஏற்படுகிறது.
எனவே, வைட்டமின் 'ஏ' குறைபாடு நோய்களை வராமல் தடுப்பதற்காக வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம் ஆண்டுக்கு 2 முறை நடைபெறுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 22ம் தேதி வரை புதன்கிழமை நீங்கலாக அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu