நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்

நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை
கோவை மாவட்டம் தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை தொண்டாமுத்தூர் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் நுழைந்து வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, சில சமயங்களில் வீடுகளில் வைத்துள்ள உணவுகளையும் சேதப்படுத்தி செல்கின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதிக்குள் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை புகுந்தது. சிறிது நேரம் அந்த யானை அப்பகுதியிலேயே சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அப்போது யானை அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த உணவு பொருளை எடுக்க முயன்றது.
ஆனால் அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் யானையால் நுழைய முடியவில்லை. இதனிடையே வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை யானை சேதப்படுத்தியது. இதில் வீட்டின் ஓடுகள் சில சேதமடைந்தன. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் எழுந்து பார்த்தனர். வீட்டிற்கு வெளியே யானை நின்றதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் சத்தம் போட்டனர். இருந்த போதிலும் யானை செல்லாமல் அங்கேயே சுற்றியது.
இதுகுறித்து மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை வனபகுதிக்குள் விரட்டினர். இதற்கிடையே யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
காட்டு யானைகள் அடிக்கடி இப்பகுதியில் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பழுதடைந்த தெரு விளக்குகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu