அண்ணாமலை, சிங்கை ராமச்சந்திரன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை, சிங்கை ராமச்சந்திரன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு..!
X

அண்ணாமலை(கோப்பு படம்)


அண்ணாமலை மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொள்ள பாஜகவினருக்கு பிற்பகலிலும், அதிமுகவினருக்கு மாலையிலும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் குறித்த நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியில் பிரசாரத்துக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொள்ளும் வாகனம் வந்தது. மாநில தலைவர் அண்ணாமலை வேறு வாகனத்தில் வந்த நிலையில், பரப்புரை வாகனம் மட்டும் தனியாக வந்தது. அதிமுகவினர் பரப்புரை மேற்கொண்டு இருந்த நிலையில், பா.ஜ.க பரப்புரை வாகனம் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் ஒரு இடத்தில் அதிமுகவினரின் வாகனங்களை கடந்து பா.ஜ.க.வின் பரப்புரை வாகனம் முன்னால் செல்ல முயன்றது. அப்போது லேசாக அதிமுகவினரின் வாகனத்தில் உரசியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த அதிமுக மற்றும் பாஜக ஆகிய இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பரப்புரை வாகனத்தில் இருந்து இறங்கிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் பரப்புரை வாகனத்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதியில் பணியிலிருந்த தேர்தல் பறக்கும் படை பொறுப்பு அதிகாரி வினோத்குமார் கொடுத்த புகாரின் மீது கருமத்தம்பட்டி காவல் துறையினர் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல வாகனத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்திய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மீது இரண்டு பிரிவுகளில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?