ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
X

ஊட்டி மலைரயிலில் பயணிகள் உற்சாக பயணம் 

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான ரயில் தண்டவாளப்பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து 11 நாட்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியது

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் பாதையோரத்தில் நின்றிருந்த மரங்கள் வேரோடு சரிந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மலை ரயில் சேவை கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி வரையும், 9ம் தேதி முதல் 18ம் தேதிவரையும் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து மலைரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இதற்கான பணியில் 25-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான ரயில் தண்டவாளப்பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மலை ரயில் சேவையை இன்று முதல் தொடங்குவது என ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் சேவை இன்று காலை தொடங்கியது. அப்போது 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து மிகுந்த ஆர்வத்துடன் மலை ரயிலில் பயணம் செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் செல்லும்போது அந்த வழியில் உள்ள இயற்கை காட்சிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை அருகில் இருந்து பார்த்து ரசிக்க முடியும். எனவே சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் மலைரயிலில் பயணம் செய்தனர்.

நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரயில் சேவை 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story