கோவையில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கிய மினிபஸ்

பைல் படம்
கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை கோவைப்புதூர், பேரூர், உக்கடம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. போத்தனூரில் 7 செ.மீ. மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாலையோர வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் மழை வெள்ளம் சாலைகளில் தேங்கி வருகிறது. மேலும் தற்போது மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறுகிறது. இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது.
சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இருசக்கர வாகனங்களில் சென்ற சிலர் தவறி விழுந்தனர்.
தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால், நீலகிரி மாவட்டத்துக்கு பெரியநாயக்கன்பாளையம் வழியாக ஏராளமான வாகனங்கள் செல்லும் நிலையில், மழை வெள்ளத்தாலும், குண்டும், குழியுமான சாலைகளாலும் வாகனங்கள் இந்த பகுதியில் ஊர்ந்தபடிதான் செல்கின்றன.
கவுண்டம்பாளையத்தில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையில் மழை வெள்ளம் 3 அடி உயரத்துக்கு தேங்கி நின்றது. அப்போது அந்த வழியாக சென்ற மினி பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
உடனடியாக அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இது போல் ரயில் நிலையம் செல்லும் சாலை, சாரதா மில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
கோவையில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதில் மழைநீர் தேங்கி நின்றால், குழி இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே மழை பெய்யும் சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும், சாலைகளை சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu