கோவை அருகே காட்டுப்பன்றி வேட்டைக்கு வைத்த வெடியை கடித்த நாய் பலி

கோவை அருகே நாட்டு வெடி வைத்திருந்த இருவர் கைது
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூச்சியூர் அருகிலுள்ள கதிர் நாயக்கன்பாளையம் ரங்கசாமி என்பவரது பட்டா நிலத்தில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சோதனை மேற்கொண்டதில், அங்கு தலை சிதறிய நிலையில் நாய் கிடந்துள்ளது. இதனையடுத்து அங்கு சோதனை மேற்கொண்டதில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடியை நாய் கடித்ததில், தலை சிதறியது தெரியவந்தது.
தொடர்ந்து அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற இரண்டு பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் முருகேசன் என்பதும், காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்த ஐந்து அவுட்டுக்காய்களை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த வனத்துறையினர், துடியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சுரேஷ் மற்றும் முருகேசன் மீது சட்டவிரோதமாக வெடி வைத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu