கோவையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய காலிங்கராயன் குளம்

காலிங்கராயன் குளம்
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட அக்ரகார சாமகுளம் மற்றும் கொண்டயம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலிங்கராயன் குளம் என இரு குளங்கள் உள்ளன.
இந்த குளத்திற்கு அக்ரகார சாமக்குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 2-3 வருடங்களுக்கு மேலாக குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
நீண்ட காலமாக தண்ணீர் இல்லாமல் குளம் வறண்டு கிடந்தது. தன்னாரவலர்கள் அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் குளத்திற்கு வரும் நீர்வழிப் பாதைகளை இயந்திரங்கள் மூலம் தூர்வாரி குளத்தின் கரைகளை பலப்படுத்தி குளத்தில் மண்மேடுகள் அமைத்து குப்பை புதர்களை அகற்றி குளத்திற்கு தண்ணீர் நிரப்பும் சூழலை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்தக் குளம் நீர்வள ஆதாரதுறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ் இரு குளங்களும் இணைக்கப்பட்டு தண்ணீர் வருவதற்காக நீரூற்று நிலையங்கள் அமைத்து காத்திருக்கிறது.
இந்த நிலையில் கோவையில் கடந்த சில தினங்களுக்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
தற்போது 2 குளங்களும் தங்களது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரு குளங்களும் நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு, அக்ரஹார சாமகுளம் பாதுகாப்பு அமைப்பினர் கூறும்போது, கடந்த 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரு குளங்களிலும் நீர் நிரம்பியுள்ளது என்றும் இது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி மற்றும் கொண்டையம்பாளையம் ஊராட்சிகளுக்கான நீர் தேவையும் பூர்த்தியாகும். இதுதவிர காலிங்கராயன் குளத்தை சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் உயருவதோடு, குளத்திற்கு பறவைகள் வருகையும் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu