பைக் பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட்: கோவையில் இன்றுமுதல் அமல்

எப்போதும் பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படும் கோவை சாலைகளில் காலை, மாலை வேளைகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
இதனால் அடிக்கடி வாகன விபத்துக்களும், இந்த விபத்துக்களில் உயிரிழப்புகளும் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகளவில் விபத்துக்களில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்க மாநகர காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே மாநகர காவல்துறையினர், இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது. இதனை தடுக்கவும், 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்பவர்களும், கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையின் உத்தரவை கடைபிடித்து, இன்று மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு சிலர் தலைக்கவசம் அணிந்திருந்தனர்.
இந்த திட்டம் அமலானதை அடுத்து முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநகர காவல்துறையினர் முக்கியமான சாலைகளில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாலைகளில் வந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் தலைக்கவசம் அணிந்துள்ளனரா என கண்காணித்தனர். அப்படி அணியவில்லை என்றால், அந்த வாகன ஓட்டிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அவர்களை போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மாநகரில் இந்த திட்டம் இன்று அமலுக்கு வந்தாலும், ஒரு சிலர் மட்டுமே இதனை கடைபிடித்தனர். ஆனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் அதனை யாரும் கடைபிடித்ததுபோல் தெரியவில்லை.
வழக்கம் போலவே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றனர். ஒரு சில இடங்களில் ஓட்டுபவர்களே தலைக்கவசம் அணியாமல் செல்வதையும் காணமுடிந்தது.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருப்பவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகிறோம். தலைக்கவசம் அணியவில்லை என்றால் மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு ஒருவார காலத்துக்கு போக்குவரத்து பூங்காவில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu