குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை மீட்ட மூதாட்டி

குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை மீட்ட மூதாட்டி
X

ஆழியார் அணை - கோப்புப்படம் 

ஆழியார் அணையில் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்துக்கு அழைத்து சென்றார்.

திண்டுக்கல் மாவட்டம் காம்பிளியாம்பட்டி அருகே உள்ள சின்னகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 29). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு வேணிஸ்ரீ (10), சுபஸ்ரீ (8), மதுமிதா (6), யோக ஸ்ரீ (4) ஆகிய 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் நான்கு குழந்தைகளும் பெண் குழந்தைகளாக உள்ளதால் செல்வம் அவரது 4 வயது மகள் யோகஸ்ரீயை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதனை அறிந்த தனலட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்தார்.

பின்னர் அவர் தனது கணவர், குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் செல்வத்தை அழைத்து அவரை கண்டித்து அனுப்பினர்.

காவல்துறையில் புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்த செல்வம் தினமும் மது குடித்து விட்டு வந்தது தனலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் தனலட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்தார்.

கணவரின் கொடுமையால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனலட்சுமி குழந்தைகளுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்து அவரது 4 பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு தற்கொலை செய்வதற்காக வந்தார். அங்கு அவர் குழந்தைகளுடன் அழுது கொண்டு இருந்தார்.

இதனை அந்த வழியாக சென்ற பருத்தியூரை சேர்ந்த சின்னாள் என்பவர் பார்த்து, தனலட்சுமியின் அருகே சென்று என்ன பிரச்சினை என கேட்டார். அதற்கு அவர் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய வந்து இருப்பதாக கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து தனது ஆலய பாதிரியாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அந்த பகுதியில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும் நிர்வாகிக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக வந்த தனலட்சுமியை மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றார்.

பின்னர் இல்ல நிர்வாகி இது குறித்து ஆழியாறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story