வால்பாறையில் கோடை விழா கொண்டாட்டம்: மாவட்ட நிர்வாகம் முடிவு

கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக் கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
மலைச்சரிவுகளில் பச்சைப் பசேல் என கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள், இதமான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதால், தினசரி ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.
கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மே மாதம் கோடை விழா நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு கோடை விழா நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள், பொது மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி மேற்பார்வை யாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வால்பாறையில் வருகிற 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் மலர் கண்காட்சியுடன் கோடை விழா நடத்துவது என்றும், கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், காவல்துறை சார்பில் நாய் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் தனித்தனி கண்காட்சிகள் நடத்துவது என்றும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு பின்னர் வால்பாறையில் கோடை விழா நடத்தப்படுவதால் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu