ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க கூண்டு

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியின் அருகிலேயே குவாரி ஆபீஸ் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள காந்திநகரில் வனவிலங்குகளின் நடமாட்டம் அடிக்கடி இருந்து வரும் நிலையில் சமீபகாலமாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வீட்டின் அருகில் இருக்கும் நாய்களையும் , ஆடுகளையும் இந்த சிறுத்தை வேட்டையாடி வருகின்றது. இதுவரை 10 க்கும் மேற்பட்ட ஆடுகளும், நாய்களும் சிறுத்தையால் வேட்டையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குவாரி ஆபீஸ் பகுதிக்கு வந்த சிறுத்தை ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவரில் அமர்ந்து இருந்தது. அதை அந்த வீட்டில் இருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். இந்நிலையில் வீட்டின் காம்பவுன்ட் சுவரில் இருந்த சிறுத்தை, சீனிவாசன் என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை வேட்டையாட முயன்றது. ஆனால் நாய் தொடர்ந்து கத்தவே நாயை விட்டுவிட்டு சிறுத்தை தப்பி சென்றது. இதையடுத்து ஞானப்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளை கடித்துக் கொன்றது.இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன் பேரில் அப்பகுதியில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu