/* */

கோவை மருத்துவக் கல்லூரியில் எலி பாசானம் சாப்பிட்டவர்களுக்கு நவீன சிகிச்சை

Coimbatore Medical College -கோவை மருத்துவக் கல்லூரியில் எலி பாசானம் சாப்பிட்டவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்கும் வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கோவை மருத்துவக் கல்லூரியில் எலி பாசானம் சாப்பிட்டவர்களுக்கு நவீன சிகிச்சை
X

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. பைல் படம்.

Coimbatore Medical College -எலி பாசானத்தை உட்கொண்டு ஆபத்தான நிலையில் வருபவர்களையும் காப்பாற்றுவதற்கான சிகிச்சை முறை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-

எலிபாசனத்தை சாப்பிடுவதால் உண்டாகும் விளைவுகள் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. அதில் உள்ள மஞ்சள் பாஸ்பரஸானது தோல், குடல் மற்றும் மூச்சுக் குழல் ஆகியவற்றில் இருக்கும் திசுக்களால் எளிதாக உறிஞ்சப்பட்டு அது குடல், கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதைப்பற்றிய ஆராய்வுகளிலிருந்து வந்த முடிவுகளில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதை முன்னிட்டு நம்முடைய தேசிய சுகாதார குழுமமும், தமிழக அரசும் சேர்ந்து அதற்கான சிகிச்சைகளைப்பற்றி சில வரைமுறைகளை வகுத்து தந்துள்ளார்கள்.

அதன்படி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதற்கான முதலுதவி செய்யப்பட்டவுடன் அவர்களை உயர் சிகிச்சைக்காக மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், தலைமை மருத்துவமனைகளில் உறுப்புகளுக்கு பாதிப்பு இல்லை என்றால் வைத்தியம் செய்யலாம் என்றும், உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான மேல் சிகிச்சை வழங்கினால் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது. இதற்காக பிரத்யேக கருவிகள் TNMSC மூலம் PLEX Machine வழங்கப்பட்டுள்ளது.

இந்த விஷமானது இரத்தத்தில் கலந்திருப்பதால் இரத்தத்தில் இருக்கும் விஷத்தை எடுப்பதன் மூலம் அதனுடைய வீரியத்தன்மை குறைந்து உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது. இதற்கு Plasma Exchange(PLEX) என்று சொல்லப்படுகிறது. அதாவது விஷத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் பிளாஸ்மாவை எடுத்துவிட்டுஅதற்கு சமமான பிளாஸ்மா இரத்த வங்கியில் இருந்து பெறப்பட்டு அந்த நபருக்கு செலுத்தப்படுகிறது. இது ஒரே நபருக்கு 3-முறை தொடர்ந்து வரும் 3-நாட்களுக்கு செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்வாரியாக குணம் அடைந்து செல்கின்றனர். இந்த செயல் முறைக்கு (Plasma Exchange) முன்பு உயிரிழப்புகள் அதிகமாக இருந்த சூழ்நிலையில் இப்பொழுது இந்த PLEX சிகிச்சையினால் உயிரிழப்புகள் விரைவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கள் மருத்துவமனையை பொறுத்தவரை ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அனுமதிக்கப்பட்ட 42- நோயாளிகளுக்கு இந்த PLEX சிகிச்சையானது வழங்கப்பட்டதில் 33பேர் உயிர் பிழைத்து வீட்டிற்கு சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிற நோயாளிகள் மிகவும் மோசமான நிலையில் நேரம் தாழ்த்தி வந்த காரணத்தினால் உயிரிழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே பொதுமக்கள் இதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு எலி பாசானத்தினால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வரும் பட்சத்தில் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்தமாதிரியான எலி பாசானத்தை யாரும் பயன்படுத்தாமல் இருக்க கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Sep 2022 11:32 AM GMT

Related News