கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோவை மாநகராட்சி
நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர், மதுக்கரை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் 15,38,411 வாக்காளர்களும், 7 நகராட்சிகளில் 198 வார்டுகளில் 2,00,131 வாக்காளர்களும், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளில் 4,73, 207 வாக்காளர்களும் உள்ளனர்.
கோவை மாநகராட்சியில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளது. இதில் 45 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கான பெண்களுக்கும், பட்டியலின பெண்களுக்கு 5 வார்டுகளும் என மொத்தம் 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல 5 வார்டுகள் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்ய 20 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 5 வார்டுகளுக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் என 20 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அந்தந்த பகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 5 முறை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் 3 முறை அதிமுகவும், த.மா.கா., காங்கிரஸ் தலா ஒரு முறையும் மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனு தாக்கல் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu