ராக்கெட்ரி திரைப்படம் பற்றி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கருத்து

ராக்கெட்ரி திரைப்படம் பற்றி  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கருத்து
கோவையில் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ராக்கெட்ரி திரைப்படம் பற்றி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கருத்து தெரிவித்து உள்ளார்.

நடிகர் மாதவன் நடித்து தயாரித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் அண்மையில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று பார்வையிட்டார்.

பின்னர் திரையரங்கிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய விண்வெளித் துறையில் மிகச்சிறந்த தொழில் நுட்ப வாதியான தமிழகத்தைச் சேர்ந்த நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ராக்கெட்ரி திரைப்படத்தில் அவரது சாதனைகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது வேண்டுமென்றே பழி சுமத்தி அவரை துறையிலிருந்து வெளியேற்றிய நிலையில் இந்த திரைப்படம் மிகச்சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இந்தியா சார்பில் எந்த ஒரு ராக்கெட் ஏவப்பட்டாலும் பஞ்சாங்க முறைப்படி கால நேரம் பார்த்தே விண்ணில் ஏவப்படுவதாகவும் ஆனால் இத்திரைப்படத்தில் பஞ்சாங்கம் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படாத சூழலில் வேண்டுமென்றே திராவிட இயக்கங்கள் சில ராக்கெட்ரி திரைப்படத்தை குறித்து தவறான விமர்சனங்களை முன் வைப்பதாகவும் கூறிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இத்திரைப்படத்தை காண்பதற்கு பிரத்யேக ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் முதலில் தமிழக முதல்வர் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

Tags

Next Story