தென்னை விவசாயத்தை பாதுகாக்க விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்னை விவசாயத்தை காக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்னையை பாதிக்கும் வாடல் நோய், கூன் வண்டு தாக்குதல், ஈயிரியோ பைட், வெள்ளை ஈ தாக்குதல் ஆகிய பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினை காரணம் காட்டி தென்னையை பயன்படுத்தி செய்யக்கூடிய தேங்காய் எண்ணெய் தயாரிப்பு, மட்டை கம்பெனி, கயிறு தொழிற்சாலை, நீரா பானம், இளநீர், ஆகிய தொழில் நிறுவனங்கள் முடக்குவதால் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடுவதாகவும் இதனை தவிர்க்க வேண்டும் எனவும், தென்னை விவசாயிகளின் நலனை பாதுகாத்திட தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் பொள்ளாச்சியை மையமாக கொண்டு தேங்காய் கொள்முதல் மையத்தை நிறுவ வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story